இலுப்பூரில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத் திறப்பு விழா புதன்கிழமை நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் மற்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நீதிமன்றத்தைத் திறந்து வைத்தனர்.
இலுப்பூரில் நீதிமன்றம் திறக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மாவட்ட கூட்டுறவுச் சங்கத் தலைவர் சின்னத்தம்பி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் குரு. ராஜாமன்னார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மை நீதிபதி நீதிமன்ற நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார்.
கந்தர்வக்கோட்டையில்... கந்தர்வகோட்டையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத் திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் மற்றும் நீதிபதி முனிக்குமார் அமர்வில் கந்தர்வகோட்டை காவல் நிலையம் மற்றும் ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் பதியப்பட்ட இரண்டு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நேரில் அழைத்து வழக்கு விசாரணையைத் தொடங்கி வைத்தனர்.
அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கந்தர்வகோட்டை எம்எல்ஏ நார்த்தாமலை பா. ஆறுமுகம் வரவேற்று, நன்றி கூறினார்.