புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி சார்பில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பேரணி, மனிதசங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி காந்தி பூங்கா அருகே பேரணியை வட்டாட்சியர் கருப்பையா தொடங்கி வைத்தார். பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வடகாடு முக்கம், அரசமரம் பேருந்து நிறுத்தம் வழியாக பேரணியாக சென்று பேருந்து நிலையத்தை அடைந்தனர். தொடர்ந்து, விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. தொடர்ந்து, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.டி. மணமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.