புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் ஆதார் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய அஞ்சல்துறை, கந்தர்வகோட்டை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாம் வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு அஞ்சல் ஆய்வாளர் எம்.கார்த்திக், துணை அஞ்சலக அதிகாரி எம்.பாரதிராஜன் தலைமைவகித்தனர். அஞ்சலக அதிகாரி எஸ்.கிருத்திகா, வீரப்பன், அழகுலெட்சுமி, ரகுவரன் முன்னிலை வகித்தனர்.
ஆதார் சிறப்பு முகாமை ரோட்டரி சங்கத் தலைவர் கே.மோகன் தொடக்கி வைத்தார். இந்த முகாமில் பெயர் நீக்கல், சேர்த்தல், புதிய ஆதார் அட்டை எடுத்தல், குழந்தைகளுக்கான ஆதார் எடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இம்முகாமில் ரோட்டரி சங்கச் செயலர் த. சதீஸ்குமார், பொருளாளர் பாலமுருகன், தெட்சிணாமூர்த்தி, வெங்கடேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.