வாஸ்து நாள் மற்றும் தேய்பிறை அஷ்டமியையொட்டி, பொன்னமராவதி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
வாஸ்து தலமாகக் கருதப்படும் பொன்னமராவதி அருகிலுள்ள செவலூர் அருள்மிகு ஆரணவல்லி சமேத பூமிநாதர் திருக்கோயிலில், வாஸ்து நாளன்று பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வெள்ளிக்கிழமை இக்கோயில் ராஜப்பா குருக்கள் தலைமையில் வாஸ்து ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கற்களை வாஸ்து நலன் வேண்டி வீடு கட்டுவோர், கட்ட எண்ணுபவர்கள் பெற்று சென்றனர். பூஜையில் சிவகங்கை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரர் கோயில், அழகியநாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சோழீசுவரர் கோயிலில் சரவண குருக்கள் தலைமையில் சிறப்பு யாகமும், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன. பூஜையையொட்டி பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது.
பூஜைக்கான ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர். அதுபோல அழகியநாச்சியம்மன் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.