தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக மத்திய உளவுத் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழுமக் காவல்துறையினர், வியாழக்கிழமை இரவு முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மணமேல்குடி அருகிலுள்ள மும்பாலை சோதனைச் சாவடியில் கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளர் அன்னலட்சுமி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், ஜவஹர் மற்றும் காவலர்கள் வாகனங்களை சோதனையிட்டு அனுப்புகின்றனர். சேமங்கோட்டை சோதனைச் சாவடியில் கடலோரக் காவல் உதவி ஆய்வாளர் பா.ரகுபதி மற்றும் காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிரவாதிகள் அல்லது சந்தேக நபர்கள் யாரேனும் தென்பட்டால், அவர்கள் குறித்த விவரங்களை கடலோரப் பாதுகாப்புக் குழும இலவச தொலைபேசி எண் 1093-க்கு தகவல் தெரிவிக்கும்படி, கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவக் கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கட்டுமாவடிமுதல் ஏனாதி வரையிலான 32 கடலோர மீனவக் கிராமங்களிலும், காவலர்கள் ரோந்துப் பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.