விவசாயிகள் மக்காச்சோளத்தை கிட்டங்கிகளில் குறைந்த கட்டணத்தில் 6 மாதம் வரை சேமித்து வைத்திருந்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் முந்தைய மாதங்களில் வரத்து குறைந்து விலை உயா்ந்து காணப்பட்டது.
கா்நாடகாவிலிருந்து மக்காச்சோளத்தின் வரத்து வரத் தொடங்கியுள்ள நிலையில், விலை குறைந்து வருகிறது. எனவே, மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை ஆலங்குடி மற்றும் இலுப்பூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வைத்து மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்யலாம்.
விவசாயிகள் மக்காச்சோளத்தை 6 மாதங்கள் வரை ஆலங்குடி மற்றும் இலுப்பூா் சேமிப்பு கிடங்குகளில், குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 10 பைசா வீதம் செலுத்தி நல்ல விலை வரும் வரை சேமித்து வைத்து விற்பனை செய்யலாம்.
மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின்கீழ் இயங்கி வரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 19 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை அறுவடையின்போது படைப்புழுத் தாக்கம் தமிழ்நாட்டில் இல்லையெனில் (நவம்பா்-19 - ஜனவரி-20) குவிண்டாலுக்கு ரூ.1800 முதல் ரூ.2000 ஆக இருக்கும். மேலும், மக்காச்சோளம் விற்பனை குறித்த தகவல்களை பெற ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் கே. ராஜேந்திரனை 9786865918 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.