புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தைச் சேர்ந்த பத்தரசர்கோட்டையில் உள்ள கம்மங்காடு தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கிராம மக்கள் கல்விச் சீர்வரிசைகளை திங்கள்கிழமை வழங்கினர்.
விழாவிற்கு, அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் அருள் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் முத்துக்குமார் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம், ஆசிரியர் பயிற்றுநர் சசிகுமார் உள்ளிட்டோர் பள்ளிக்கு சீர்வரிசை கொண்டு வந்து கொடுத்த கிராம மக்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான நாற்காலி, பெஞ்ச், எழுதுபொருள்கள், கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுடன் மதிய உணவிற்குத் தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் வழங்கினர்.
நிகழ்ச்சியில், நன்கொடையாளர்கள் ஆசைத்தம்பி, ராஜ சோழீஸ்வரர் குருக்கள், சந்திரப்பாத்தேவர், மெய்யநாதன், சோமு, சுப்பையா, மண்ணையா, கைலாசம், மகாலிங்கம், இளையராஜா மற்றும் பலர் பள்ளிக்கு புரவலர் தொகை வழங்கினர்.
விழாவில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சுப.கவிதா, சுகன்யா, கோமதி, பார்வதி மற்றும் கிராமத்தினர் ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பள்ளித் தலைமை ஆசிரியர் வெற்றிவேல் வரவேற்றார். தளபதி ராமநாதன் நன்றி கூறினார்.