ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் முறைகேடு புகாரில் நிறுத்தி வைக்கப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தேர்தல், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விடியோ பதிவுடன் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நடைபெற்றது.
கொத்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடப்பதாக இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலர் த. செங்கோடன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், திருச்சி மண்டலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜசூர்யா விசாரணை செய்தார். அதில், கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கத்தின் தேர்தலை போலீஸ் பாதுகாப்புடன் விடியோ பதிவு செய்து நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, கூட்டுறவு சங்கத்தேர்தல் பிப்.18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு திங்கள்கிழமை தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலரான கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாளர் வனிதா வேட்பு மனுவை பெற்றுக்கொண்டார். இதில், அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.