தொழுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய நோயாகும். இதைக்கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார் மாவட்ட தொழுநோய் தடுப்பு அலுவலர் எஸ்.சுவாமியப்பன்.
அறந்தாங்கி அருகே இராஜேந்திரபுரம் நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தொழுநோய் தடுப்பு இயக்கம் செவ்வாய்க்கிழமை இணைந்து நடத்திய தொழுநோய் விழிப்புணர்வு தினத்திற்கு கல்லூரி தாளாளர் நை.முகமது பாரூக் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செ.இராபர்ட் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாவட்ட தொழுநோய் தடுப்பு அலுவலர் எஸ்.சுவாமியப்பன் பேசியது:
1974-ஆம் ஆண்டு தொழுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. இது பாக்டீரியாவால் உருவாகும் ஒரு நோய். இது உடலில் சிவந்து உணர்வு இல்லாத தேமலாக தோன்றும். சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் நரம்புகளைப் பாதித்து பாகங்கள் செயல்படமுடியாமல் செய்யும் ஆற்றல் பெற்றது. இது முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகக் கூடிய நோய் தான். இதுவரை 15 கோடி பேர் இந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதன் நோக்கம் கிராமப்புறங்களில் இந்நோய் குறித்து அறியாதவர்கள் இருக்கலாம். எனவே மாணவிகள் இதுகுறித்து அவரிகளிடம் விளக்கி சிகிச்சைக்குச் செல்லும்படி கூறவேண்டும் என்றார்.
மாவட்ட நலக் கல்வியாளர் ஜி. வெங்கட்ராமன் தலைமையில் மாணவிகள் தொழுநோய் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சுகாதார கிராம செவிலியர் இந்திராணி, சுகாதார ஆய்வாளர் குமார், பன்னீர் செல்வம், கல்லூரி மேலாளர் கே. மாரிச்சாமி மற்றும் பேராசிரியர்கள் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஆர்.காயத்திரி வரவேற்றார். வணிகவியல் துறை பேராசிரியர் ஆர்.அன்புக்கரசி நன்றி கூறினார்.