கஜா புயல் நிவாரணம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை காந்தி நகரில் பொதுமக்கள்செவ்வாய்க்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
கஜா புயலால் மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிவாரண உதவித் தொகை, உதவிப் பொருள்கள் பெட்டகம் போன்றவை வழங்கப்பட்டன. இந்த நிலையில், புதுக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு இதுவரை கஜா புயல் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை எனக் கூறி செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கணேஷ் நகர் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தால் ஆலங்குடி சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.