மாசி மகத்தையொட்டி புதுக்கோட்டை கீழராஜவீதியில் வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காலை முதலே சாந்தநாத சுவாமி, வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் இரவு கோயில் அருகே உள்ள பல்லவன் குளத்தில் 11 ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளிய பின்னர் தெப்போற்ஸவம் நடைபெற்றது. புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, குளத்தின் 4 கரைகளிலும் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து வேதநாயகி அம்மன் மற்றும் சாந்தசுவாமி வீதிஉலா நடைபெற்றது.
இதில் வயி.சண்முகம்பிள்ளை ஜூவல்லர்ஸின் உரிமையாளர் வயி.ச. வெங்கடாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட தங்கம், வைரம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.