புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் சத்குரு தியாகராஜ சுவாமிகள் 26 ஆம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் தமிழிசை விழா புதன்கிழமை தொடங்கியது.
பொன்.புதுப்பட்டி ராமாயண மண்டபத்தில் மூலங்குடி ஆர்.கண்ணன், மதுரை வி.கிருஷ்ணன் பாகவதர், புதுப்பட்டி சௌமியநாராயணன் ஆகியோரது உஞ்சவிருத்தி பஜனை காலையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தியாகராஜ சுவாமிகளின் பட ஊர்வலத்தை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.எம்.ராஜா தொடக்கி வைத்தார்.
முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த ஊர்வலம் விழா அரங்கில் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து உடுப்பி என்.சுப்பிரமணி குத்து விளக்கேற்றி ஆராதனை விழாவைத் தொடக்கி வைத்தார்.
குரும்பூர் எஸ்.காளிதாஸ், பி.என். முத்துக்குமார், ஆலத்தூர் எம்கே.ராஜா, விசலூர் விஆர்.மருதுபாண்டி, பிஎன்.ஸ்ரீகாந்த், மலைக்கோட்டை எஸ்.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்ற நாகசுர இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சத்குரு தியாகப்பிரம்ம மகோத்ஸவ சபா தலைவர் எஸ்.பரமேஸ்வர
குருக்கள், செயலர் ஏஆர்.வெங்கடாசலம், பொருளாளர் கேஆர்எஸ்.கந்தசாமி, நிர்வாகிகள் வலையபட்டி எம்.ஏ.கலையரசன், நாகப்பன், ஏஆர்.கதிரேசன், எஸ்.சரவண குருக்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.