அறந்தாங்கி அருகே அழியாநிலை அண்ணாமலையான் குடியிருப்பு மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி உள்ளிட்டவற்றில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பில் அண்ணாமலையான் குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பிரேசில் நாட்டிலிருந்து வந்த ரோட்டரி அமைப்பினர் பங்கேற்று பாரம்பரியப்படி பொங்கல் வைத்தனர்.
முன்னதாக ரோட்டரி கிளப் தலைவர் அ. அபுதாலிப் தலைமையில் மாட்டு வண்டியில் வந்த அவர்களை ஆரத்தி எடுத்து மாணவிகள், கிராமத்தினர் வரவேற்றனர். பின்னர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பொங்கல் வைத்தனர், மேலும் பானை உடைப்பு, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்வில் ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன், கிராமத்தினர், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஆவுடையார்கோவில் அருகே பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு கல்லூரி முதல்வர் வி. ஜெயராஜ் தலைமை வகித்தார், தமிழ்த்துறைத் தலைவர் மு. திருவாசகம், ஆங்கிலத் துறைத் தலைவர் அ. கணேசன், வணிகவியல் துறைத் தலைவர் என்.கே. ராஜேந்திரன், கணினி அறிவியல் துறை எஸ். ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவிகள் துறைவாரியாக பொங்கலிட்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.