ஜல்லிக்கட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான 

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஜல்லிக்கட்டுப் போட்டிகளை வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்தும் வகையில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியது:
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான  ஜல்லிக்கட்டுப் போட்டிகள்  மாவட்டத்தில் இந்த ஆண்டும்  நடைபெறவுள்ளது. போட்டிகள் உரிய விதிமுறைகளின் படி நடத்தப்படுவதை கண்காணிக்கும் வகையில் வருவாய்க் கோட்டாட்சியர், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களைக் கொண்ட கோட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைத் தணிக்கை செய்யும் வகையில் பல்வேறு நபர்கள கொண்ட மாவட்ட அளவிலான தணிக்கைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் மற்றும் விழா ஏற்பாடுகளைத் தணிக்கை செய்து, அதன் குறைபாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிக்கும்.
அதனடிப்படையில் குறைகள் சரிசெய்யப்பட்ட பின் மட்டுமே  ஜல்லிக்கட்டு நடத்தப்படும். குறிப்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டு விழா குழுவினர் போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரர் குறித்த விவரங்களை முன்கூட்டியே தெரிவித்து, முன் அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 
பொதுப் பணித்துறையினர் பார்வையாளர் அரங்கம் அமைத்தல், காளைகள் செல்லும் வழி தடுப்புகள் அமைத்தல் போன்ற பல்வேறு கட்டுமான பணிகளை பார்வையிட்டு சரிசெய்ய வேண்டும்.
கால்நடை பராமரிப்புத்துறையினர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளை பரிசோதனை செய்யவும், சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களை மருத்துவ பரிசோதனை செய்யவும் வேண்டும்.
இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை உரிய விதிமுறைகளின்படி சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்றார் கணேஷ்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை) பரமேஸ்வரி, கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர் பன்னீர்செல்வம், மாவட்ட கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com