நிவாரணம், பொங்கல் பரிசு கோரி சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் 4 சாலையில் நிவாரணம் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தகோட்டை ஊராட்சியில் பெரும்பாலான குடும்பத்தினருக்கு புயல் நிவாரணம் வழங்கப்படவில்லையாம். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகையும் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் இல்லையாம். இதனால், அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம், பொங்கல் பரிசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வம்பன் 4 சாலை பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து சென்ற ஆலங்குடி போலீஸார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை -பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.