புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பூவரசகுடியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பூவரசக்குடி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன், கல்விக்கடன், சுயஉதவிக் குழுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், புதுக்கோட்டை- அறந்தாங்கி இடையே இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகள் பூவரசகுடி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் ஒன்றியச்செயலர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.