புதுகை மாவட்டம், அறந்தாங்கி அருகே திருட்டுத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 64 யூனிட் ஆற்று மணலை அறந்தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபு ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தார்.
அறந்தாங்கி அருகே அத்தாணி கோங்குடி மற்றும் ஆளப்பிறந்தான், அழியாநிலை ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி பொக்லைன் மற்றும் ஜே.சி.பி வாகனங்களின் மூலம் மணல் அள்ளி சாலையோரங்களில் குவித்து லாரிகள் மூலம் பிற மாவட்டங்களுக்கு விற்கப்படுவதாக கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், அறந்தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபு மற்றும் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கோங்குடி அத்தாணி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த 64 யூனிட் மணலைக் கைப்பற்றி பொதுப்பணித் துறை மூலம் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மதிப்பு 90 ஆயிரத்து 440 ஆகும்.