அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் எதிரில் இருந்த ஏஐடியுசி தொழிற்சங்க கம்பம், நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டதாகக் கூறி அச்சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி ஆணையர் மற்றும் அவருக்கு துணையாக இருந்த அலுவலர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்கத்தின் நகர அமைப்பாளர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.ஆட்டோ சங்க தலைவர் ஆர்.மோகன், டாடா ஏஸ் சங்க தலைவர் வி.கணேசன், சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் ஆ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் மு.மாதவன் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் கே.ஆர்.தர்மராஜ், மாவட்டச் செயலாளர் வி.சிங்கமுத்து உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.