சுயபடம் எடுத்தபோது ரயில் மோதி சாவு: சந்தேகம் உள்ளதாகப் புகார்

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றுப் பாலத்தில் சுயபடம் எடுத்தபோது ரயில் மோதி கல்லூரி மாணவர்

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றுப் பாலத்தில் சுயபடம் எடுத்தபோது ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக அந்த மாணவரின் பெற்றோர் மற்றும் கல்லூரி நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மச்சுவாடியைச் சேர்ந்தவர் குமாரவேல், ஓய்வுபெற்ற உதவிக் காவல் ஆய்வாளர். இவரது மகன் மணிகண்டன் (19). இவர் புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். கடந்த ஜூன் 28ஆம் தேதி புதுக்கோட்டை அருகே பூசத்துறையில் உள்ள வெள்ளாற்றுப் பாலத்தில் நண்பர்களுடன் இருந்தபோது, அந்த வழியாக வந்த ரயில் முன்பு சுயபடம் எடுக்கும்போது ரயில் மோதி இறந்தார் எனக் கூறப்பட்டது.
காரைக்குடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணிகண்டன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர்.
திங்கள்கிழமை மாலை புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கூடிய இவர்கள் சாலை மறியல் செய்யப் போவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். மறியல் முயற்சி தடுக்கப்பட்டது. இறந்த மணிகண்டனின் பெற்றோர் மற்றும் நண்பர்களை அழைத்து நகரக் காவல் ஆய்வாளர் பர வாசுதேவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மணிகண்டனின் செல்லிடப்பேசி உடையவில்லை. சுயபடம் எடுத்த படங்கள் செல்லிடப்பேசியில் இல்லை. எனவே மணிகண்டன் எப்படி இறந்தார் என்பது குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முறைப்படி புகார் அளிக்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். ஏற்கெனவே ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நகரப் போலீஸார் தலையிட்டு விசாரணை நடத்துவது குறித்து போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com