மாணவர்கள் சரித்திர அறிவைப் பெற நாளிதழ்களைத் தொடர்ந்து வாசிப்பது அவசியம் என்றார் ஞானாலயா நூலக நிறுவனர் கே. கிருஷ்ணமூர்த்தி.
புதுக்கோட்டையில் "தினமணி' நாளிதழ் சார்பில் "வாசிப்போம் வளர்வோம்' என்ற திட்டத்தின் கீழ் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 100 நாள்களுக்கு 25 தினமணி நாளிதழ்களை இலவசமாக மாணவிகளுக்கு விநியோகம் செய்யும் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கே.கிருஷ்ணமூர்த்தி பேசியது:
இந்திய நாட்டின் சரித்திர அறிவு மாணவர்களுக்கு முறையாகப் புகட்டப்படவில்லை. நாட்டின் விடுதலைப் போராட்டக் களத்தில் பணியாற்றிய ராம்நாத் கோயங்காவால் தொடங்கப்பட்ட முதன்மையான நாளிதழ் "தினமணி'. தொடக்கத்தில் அரையணாவுக்கு "தினமணி' நாளிதழ் விற்பனை செய்யப்பட்டது. பத்திரிகை உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் டி.எஸ். சொக்கலிங்கம் "தினமணி'யின் முதல் ஆசிரியர். இன்றுவரை "தினமணி' தன்னுடைய தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் வெளி வந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் சரித்திர அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாளிதழ்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்றார் கிருஷ்ணமூர்த்தி.
குழந்தைகள் நல மருத்துவரும், பொன்மாரி கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ச. ராம்தாஸ் பேசும்போது, ""சமூக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் பாடப்புத்தகத்தை தாண்டி நாளிதழ்களை வாசிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்'' என்றார்.