கொப்பரைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்று பயன்பெற அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் தங்களது தேங்காய் கொப்பரைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்ச ஆதார


புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் தங்களது தேங்காய் கொப்பரைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்ச ஆதார விலையில் விற்று பலனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் தேங்காய் கொப்பரையின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 10,076 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேங்காய் விலை குறையும்போது விவசாயிகள் அவற்றை மதிப்புக் கூட்டி தேங்காய் கொப்பரையாக விற்பனை செய்கின்றனர். 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 450 மெட்ரிக் டன் அரைவை கொப்பரையும், 50 மெட்ரிக் டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முதன்மைக் கொள்முதல் நிலையமாகவும், அறந்தாங்கி தென்னை வணிக வளாகம் துணை கொள்முதல் நிலையமாகவும் செயல்படும். மத்திய அரசால் 2019ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.99.20 மற்றும் அரைவை கொப்பரைக்கு ரூ.95.21 என்ற விலையிலும் கொள்முதல் செய்யப்படும். 
கொப்பரை கொள்முதல் வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை  சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் கொப்பரைக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com