கந்தர்வகோட்டை ஒன்றிய அரசுப் பள்ளிகளில் 3,4,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு புத்தகங்கள் வராததால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், ஆசிரியர்களும் பாடம் நடத்தாமல் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி என மொத்தம் 88 பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
இந்த பள்ளிகளுக்கு நிகழாண்டிற்கான பாட புத்தகங்கள் தொடக்கப் பள்ளிகளுக்கு 1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், நடுநிலைப்பள்ளிக்கு 6, 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விலையில்லா இலவசப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறந்து 10 நாட்கள் ஆன நிலையில் பாடப் புத்தகங்கள் வழங்காததால் பள்ளி மாணவர்கள் வெறுமனே பள்ளிக்குச் செல்லும் நிலை உள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அரசால் வழங்கப்படும் இலவச பாடப் புத்தகம் உள்ளிட்ட 14 வகை பள்ளி உபகரணங்கள் மற்றும் இன்ன பிற சலுகைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில் இதுவரை பாடப் புத்தகம் வழங்காதது பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகே
பாடப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும். அதுவரையில், டெக்ஸ்புக்ஸ் ஆன்லைன் இணையதளத்தில் பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என பள்ளிக்கல்வித் துறை அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.