புதுக்கோட்டை மாவட்ட வருவாய் துறை சார்பில் விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி, குடிகள் மாநாடு புதன்கிழமை நிறைவுபெற்றது. இதில், 7 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வருவாய்த் துறை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் வருவாய் தீர்வாயம் 1428 பசலிக்கா விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கிராமங்களான கொடும்பாளூர், நீர்பழனி, மற்றும் விராலிமலை ஆகிய 3 உள்வட்டங்களுக்கான ஜமாபந்தி கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. விழாவுக்கு, புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் நீர்பழனி, கொடும்பாளுர், விராலிமலை ஆகிய உள் வட்டங்களிலிருந்து 193 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில், 23 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
கடைசி நாளான புதன்கிழமை குடிகள் மாநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணம், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா உள்ளிட்ட பல்வேறு மனுக்களுக்கு, ரூ.7 லட்சத்து 74ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், விராலிமலை வட்டாட்சியர் ஜெ. சதீஸ் சரவணகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ராஜேஸ்வரி, தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சேக்அப்துல்லா, தலைமை நிலஅளவையர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு மற்றும் குடிகள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டத்தில் 1428 பசலி வருவாய் தீர்வாயம் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா தலைமை வகித்து காரையூர் சரக வருவாய் கணக்குகளைத் தணிக்கை செய்தார். 11 ஆம் தேதி அரசமலை சரகத்திற்கும், 12 ஆம் தேதி பொன்னமராவதி சரகத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது. மாலை குடிகள் மாநாடு நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 162 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. மேலும் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கஜா புயலில் பாதிக்கப்பட்ட புறம்போக்கு நிலங்களில் குடியிருந்தவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா என 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பொன்னமராவதி வட்டாட்சியர் ஆர்.பாலகிருஷ்ணன், தனி வட்டாட்சியர் சங்கர காமேஸ்வரன், துணை வட்டாட்சியர்கள் ஜெயராமன், வெள்ளைச்சாமி, வட்ட நில அளவையர் செந்தில்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.