பிரதமர் விவசாய நிதியுதவி திட்டத்தில் சேர அழைப்பு
By DIN | Published On : 14th June 2019 09:22 AM | Last Updated : 14th June 2019 09:22 AM | அ+அ அ- |

நிகழாண்டு பிப்ரவரி 24 ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வரும், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேருமாறு இலுப்பூர் பகுதி விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இலுப்பூர் வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்று வரும் ஜமாபந்தியில் மனு அளித்து பயன்பெறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இலுப்பூர் வட்டாட்சியர் முருகப்பன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த பிப்ரவரி 24 ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ, 6 ஆயிரம் நிதி உதவி 3 தவணைகளில் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இத்திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் தவிர தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிரம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம்.