புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி கடற்கரை பகுதி அமைந்துள்ள கோடியக்காடு கடற்கரை பகுதியில் உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழக வனத்துறை, தமிழக மீன்வளத்துறை, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், கடற்கரை மற்றும் காட்டின் சுற்றுவட்டார பகுதிகளில் இயற்கை சூழலை தூய்மைப்படுத்தும் மருத்துவ குணமுடைய புன்னை மரக்கன்றுகள் மற்றும் 5ஆயிரம் புன்னை விதைகள் முறையாக விதை நேர்த்தி செய்யப்பட்டு நடவு செய்யப்பட்டது.
பின்னர், மீனவர்களுக்கு கடல் வளம் மேம்பாடு பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானிகள் ஆனந்த் பாண்டே மது, ருக்மணி மற்றும் குழுவினர் வனத்துறை வனச்சரகர் ராஜசேகரன், மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் கனச்செல்வம், கீழ்குடியிருப்பு கிராம தலைவர் சுவசுப்பிரமணியம், வடக்கு அம்மா பட்டிணம் தலைவர் சலீம், கடலோர பாதுகாப்பு குழு ஆய்வாளர் சுபா, உதவி ஆய்வாளர்கள் ஜவஹர், ரகுபதி, ராஜ்குமார், மற்றும் ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.