அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலர் எஸ். ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.எஸ். ஓவியா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலர் துரை. நாராயணன் உள்ளிட்டோரும் பேசினர்.
கோரிக்கைகள்: அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். அங்கீகாரம் இன்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டை முறையாக அமலாக்கிட கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.