ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார் தமிழ்ப்பேரரசு கட்சித் தலைவரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன்.
பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அக் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. குறுவை சாகுபடி 8 ஆண்டுகளாக இல்லாத நிலையில் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையை திசை திருப்பும் முயற்சியாகவே ஒற்றைத் தலைமை பிரச்னையை கொண்டு வந்து நாடாகமாடி வருகின்றனர்.
காவிரி ஆணையம் தமிழகத்துக்கு கர்நாடகம் 9.1 டி.எம்.சி தண்ணீரை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அந்தத் தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தத் திட்டத்தை கைவிடாமல் பொதுமக்களை அடக்குவதற்காக தமிழக அரசு முயற்சித்து வருகிறது. நீட் தேர்வின் காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கு பிரதமரும், தமிழக முதல்வரும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள விவசாயிகளை அழிக்கவும், மாணவர்கள் இறப்பதும், மீனவர்கள் அழிக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நீடித்தால் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட நிறைவேற்றப்படாத திட்டங்களை அரசு கவனித்து செயல்படுத்த தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.