கிடைத்தும் பலனில்லை: சோகத்தில் மீனவர்கள்
By DIN | Published On : 18th June 2019 08:54 AM | Last Updated : 18th June 2019 08:54 AM | அ+அ அ- |

மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடந்த சனிக்கிழமை முதல் கடலுக்கு செல்லத் தொடங்கிய மீனவர்களுக்கு மிக அதிக அளவில் மீன், நண்டு, இறால் போன்றவை கிடைக்கத் தொடங்கின. இருப்பினும், அவற்றை சேமிக்க போதுமான இடமின்றி ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்ய மறுத்ததால் மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாபட்டிணம் மற்றும் கோட்டைப்பட்டிணத்தில் விசைப்படகு துறைமுகம் உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்களும் உள்ளனர். இந்நிலையில், மீன்களின் இனப்பெருக்கத்துக்காக அரசு விதித்த தடைக்காலம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி, ஜூன் 15ம் தேதி வரை 60 நாள்களுக்கு அமலில் இருந்தது.
அந்த தடைக்காலம் நிறைவடைந்த பிறகு, மிகுந்த உற்சாகத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு கை மேல் பலன் கிடைத்தது. வழக்கத்தை விட கூடுதலான மீன், நண்டு, இறால் வரத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர். அடுத்தடுத்து அதிக அளவில் மீன் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தும், அந்தப் பலனை அறுவடை செய்ய முடியாத நிலையில் மீனவர்கள் உள்ளனர். மீன்பிடி தடைக்காலத்தின்போது பராமரிப்பு பணிகளைத் தொடங்கிய ஏற்றுமதி நிறுவனங்கள் பலவும், தற்போது வரை திறக்கப்படவில்லை. திறந்திருக்கும் நிறுவனங்களிலும் கொள்முதல் அளவுகளைத் தாண்டி விட்டதால் புதிதாக வரும் மீன், நண்டு, இறால் ஆகியவற்றை பதப்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் அந்நிறுவனங்கள் கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இத்தகைய சூழலில், கோட் டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இரு இடங்களிலும் நிலைமை சீரடைய வேண்டி, விசைப்படகுகள் திங்கள்கிழமை கடலுக்குச் செல்லாது என மீனவர் சங்கத்தினர் அறிவித்துவிட்டனர். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து, மீண்டும் ஏராளமான மீன்கள் கிடைத்ததால் நல்ல வருமானம் கிடைக்கும் என நினைத்த மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மேலும் இத்தொழிலை சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீன் வரத்து இருந்தும் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.