புதுக்கோட்டை: புதுக்கோட்டை வெள்ளனூர் அருகே செவ்வாய்க்கிழமை பகலில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரு ஓட்டுநர்கள் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே ஏனாதி பகுதியைச் சேர்ந்த அன்சாரி (37) என்பவர் காரில் புதுக்கோட்டை வழியாக திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது காரை ஓட்டுநர் தம்பி மரைக்காயர் (27) ஓட்டி வந்துள்ளார்.
கடலூரில் இருந்து லோகநாதன் (37) என்பவர் ஒரு காரில் புதுக்கோட்டை நோக்கி வந்தார். இரு கார்களும் புதுக்கோட்டை அருகே வெள்ளனூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை பகலில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் தம்பி மரைக்காயர் ஓட்டி வந்த கார் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்தில் மூன்று பேரும் காயமடைந்தனர். அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெள்ளனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.