பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்னை இருப்பதால், குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க முடியாமல் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயமில்லை என்ற போதிலும், நடைமுறையில் பெரும்பாலான பள்ளிகள் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண் பெற்று வருகின்றன.
அந்த வகையில் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க இ-சேவை மையங்களை நாடி வரும் நிலையில், சர்வர் பிரச்னை காரணமாக பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உள்பட்ட 42 ஊராட்சிகளை சார்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் இந்த மையங்களை நாடி அரசு சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.
ஆனால் இ-சேவை மையங்களில் சர்வர் அடிக்கடி இயங்காமல் தடைபடுவதால் பெற்றோர்கள் உடனுக்குடன் சான்றிதழ்களை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அரசு இதை கவனத்தில் கொண்டு விரைந்து சர்வர் சரியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.