புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள செம்பட்டிவிடுதியில் குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செம்பட்டிவிடுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, சில மாதங்களுக்கு முன் புதிதாக ஆழ்குழாய் கிணறு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீர் மாசுகலந்து வருவதால், அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி பெரும் சிரமத்திற்காளாகி வந்துள்ளனர்.
இதுகுறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் இல்லையாம். இதனால்,ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் செம்பட்டிவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற ஆலங்குடி போலீஸார், புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.