கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 22 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் தெரிவித்தார்.
திருமயம் அருகிலுள்ள நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை அவர் அளித்த பேட்டி: சிவகங்கை மாவட்டம் , தேவக்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ் (49). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 1996ஆம் ஆண்டில் காரைக்குடியில் தனியாக இருந்த ஒரு பெண்ணை கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். ஐந்தரை ஆண்டுகள் தண்டனை அனுபவித்த நிலையில் , பரோலில் தேவக்கோட்டை வந்த செல்வராஜ், பின்னர் தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக தேவக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், பொன்னமராவதி பகுதிகளில் அண்மையில் நடந்த வாகனச் சோதனையில் துணைக்காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன், ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் செல்வராஜுவைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கடியாபட்டியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியாக இருந்த அழகம்மையை கழுத்தை அறுத்துக் கொலை செய்தது, 2015 ஜூன் மாதம் பனையப்பட்டியில் மீனாட்சியைக் கொலை செய்தது, 2017 ஆம் ஆண்டில் பொன்னமராவதி வலையப்பட்டியில் நாகம்மையை கீழே தள்ளி, திருகைக்கல்லைத் தூக்கிட்டு கொலை செய்தது செல்வராஜ்தான் எனத் தெரிய வந்தது. மேலும் இந்த 3 பேரும் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டதும், அவர்களிடம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து செல்வராஜிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்.