புதுக்கோட்டை நகரிலுள்ள புதுக்குளத்தில் தன்னார்வலர்கள் சனிக்கிழமை தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
இந்தப் பணி தினமும் காலை 6 மணிக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகரிலுள்ள குளங்களில் பிரதானமானது புதுக்குளம். தொடக்கத்தில் அரசு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு பணிகள் இந்தக் குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தற்போது முள்புதர் மண்டிக் கிடக்கிறது.
இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பொறந்த ஊருக்குப் புகழைச் சேரு (பாப்ஸ்) உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை காலை 6 மணிக்கு குளத்தில் குவிந்தனர்.
குளத்தின் கரையிலுள்ள முட்புதர்களை அகற்றி சீர்செய்யும் பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து தினமும் காலை 6 மணிக்கு இப்பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.