அன்னவாசல் அருகேயுள்ள இருந்திராப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச் சீர் மற்றும் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியர் மு. சரஸ்வதி தலைமைவகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் கெ. கு. பிரியா, அரு. பொன்னழகு, பெ. துரையரசன், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆண்டு விழாவையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான உபகரண பொருள்களை கல்விச்சீராக அளித்தனர்.
கந்தர்வகோட்டை:புதுக்கோட் டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள வளவம்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கிராம பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கல்விச்சீர் வழங்கினர்.
டேபிள், பீரோ, மின்விசிறி, நாற்காலி, டிவி, ஒலிபெருக்கி உள்ளிட்ட பள்ளிக்குத் தேவையான ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வளவம்பட்டி கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டுவந்து பள்ளியில் வழங்கினர். கிராம மக்களை பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா தலைமையில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வரவேற்றனர். தொடர்ந்துமாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.