குடுமியான்மலையில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை தொடங்கிய முகாமானது வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் முகாமுக்கு கல்லூரி முதல்வர் கு. சிவசுப்ரமணியன் தலைமை வகித்து மரக்கன்று நட்டு வைத்தார்.தொடர்ந்து விவசாயம் காப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
2 ஆம் நாள் சனிக்கிழமை குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.
பின்னர் மாணவர்கள் குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோயிலில் உழவார பணிகளில் ஈடுபட்டு கோயில் வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.நாட்டுநலப் பணித்திட்ட ஆலோசகர் சுகன்யா கண்ணா,மாணவர் மன்ற ஆலோசகர் அசோகன், ஸ்டாமின் துணை இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சிறப்பு முகாமில் வேளாண் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள்,கருத்து பரிமாற்றங்கள் மற்றும் சமுதாய நலப்பணிகள் நடைபெற உள்ளது.