அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு நாசமானது.
தமிழகத்தில் உள்ள 5 முக்கிய அரசு நூற்பாலைகளில் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையும் ஒன்று. இங்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலைக்காக பஞ்சிலிருந்து நூல் இழைகளைப் பிரித்து எடுத்து கோன்களாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை மே தினம் என்பதால் தொழிலாளர்கள் ஆலைக்கு வரவில்லை.
எனவே, ஆலையில் 2 எலக்ட்ரீசியன்களும் 2 காவலாளிகளும் மட்டுமே பணியில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், காவலாளி ரோந்து பணிக்கு செல்கையில் பஞ்சுகள் மற்றும் நூல் கோன் வைத்துள்ள குடோன் அறையிலிருந்து புகை வருவதைப் பார்த்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் கீரமங்கலம்
தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் வந்து தண்ணீரை பீச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏதேனும் நாச வேலையா, மின் கசிவா என்ற கோணத்தில் ஆவுடையார்கோவில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.