புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் காமகோடீசுவரி உடனாய கதலிவனேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் உள்ள கதலிவனேசுவரர் கோயில் புராதனச் சிறப்பு பெற்ற கோயிலாகும். கதலி எனும் வாழை வனத்தில் இருப்பதால் மூலவர் கதலிவனேசுவரர் என அழைக்கப்படுகிறார். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் கி. பி 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கூறப்படுகிறது.இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு அதன் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக 10 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை ஆறாம்கால பூஜை நடைபெற்று, சோம.பி. சோமசுந்தரம் தலைமையில் காலை 9.30 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரினை கும்பத்தில் ஊற்றி சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு செய்தனர்.
ரவி குருக்கள், சரவணன் குருக்கள் ஆகியோர் சர்வசாதகம் செய்திருந்தனர். விழா வர்ணனைகளை திருக்களம்பூர் நெ.ராமச்சந்திரன், மேலைச்சிவபுரி காஸ்மோ ராமநாதன் ஆகியோர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை வேந்தன்பட்டி சொ.மொ.பழ குடும்பத்தினர் மற்றும் திருக்களம்பூர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
விழாவில் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம், நாச்சம்மை கண்ணன், அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ராமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாலை மஹா அபிஷேகம், திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திவிழா நடைபெற்றது. பொன்னமராவதி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.