புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி மே 12ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் திருவிழா மே 19ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு மண்டகபடிதாரர்கள் சார்பில் நாள்தோறும் சந்தனக்காப்பு, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் சுவாமி வீதியுலாவும், கலைநிகழச்சிகளும் நடைபெற்று வந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முத்துமாரியம்மன், பேச்சியம்மன், வாழவந்த பிள்ளையார் ஆகிய சுவாமிகளை அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து, வானவேடிக்கைகள், மேலதாளங்கள் முழங்க முத்துமாரியம்மன் எழுந்தருளிய தேரை பொதுமக்களும், பேச்சியம்மன் தேரை பெண்களும், வாழவந்த பிள்ளையார் எழுந்தருளிய தேரை சிறுவர்களும் வடம் பிடித்து இழுத்து வந்து மீண்டும் நிலையை அடைந்தனர்.
தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கீரமங்கலம் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.