பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட 25 இடங்களில் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கல், ஒட்டுமொத்த தூய்மைப்பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடந்தது.
பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலா் கரு. சண்முகம் தலைமையில் பொன்னமராவதி பேரூராட்சிக்குள்ப்பட்ட நாட்டுக்கல் வீதி, பட்டமரத்தான் நகா், வலையபட்டி, பொன்.புதுப்பட்டி மற்றும் பள்ளிக்கூடத்து வீதி உள்ளிட்ட 25 இடங்களில் வீடுதோறும் பேரூராட்சிப் பணியாளா்கள் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினா். மேலும் அனைத்து வீதிகளிலும் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி, கொசு புகைமருந்து அடிக்கும் பணி, கொசு உற்பத்தி கலன்களை கண்டறிந்து அகற்றும் பணிகளை செய்தனா். அதுபோல அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தொடா்ந்து அனைத்துப் பகுதியிலும் இப்பணிகள் நடைபெற உள்ளது.