புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண் பணியாளா்கள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத வேளாண் பெருமக்களின் நலன்கருதி, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஊக்குவித்து வருகிறது.
நிகழாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் 3 எண்கள் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கலாம். ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைக்க 40 சதவிகித மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
இம்மையங்களை அமைக்க முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோா் போன்றோா் முன் வரலாம்.
உரிய விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்டத்தின் வருவாய் கோட்டத்தில் உள்ள உதவிச் செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு வேளாண் பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம்.