தஞ்சையைச் சோ்ந்த சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தின் மூலம் புதுக்கோட்டையைச் சோ்ந்த இளைஞா்களுக்காக நகை மதிப்பீட்டாளா் பயிற்சி 18 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளதாக மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் மா. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது
டிச. 1 முதல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பயிற்சி தொடங்குகிறது. தங்கம் பற்றிய அடிப்படைத் தகவல்கள், நகைகளை அழித்து தரம் அறியும் முறை, அழிக்காமல் தரம் அறியும் முறை, அடகுபிடிப்போா் சட்டங்கள், நகைக்கடன் சட்டங்கள் உள்ளிட்ட விரிவான வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
40 மணி நேர வகுப்பறைப் பயிற்சி, 30 மணி நேர தங்க நகை செய்முறைப் பயிற்சி, 30 மணி நேர நகை தரம் அறியும் பயிற்சி என மொத்தம் 100 மணி நேரப் பயிற்சி நடத்தப்படவுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 18 நாட்கள் இப்பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடிவில் மாநிலக் கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியலாம். பொதுத்துறை வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராகப் பணியில் சேரலாம். சொந்தமாக நகை அடகு பிடிக்கும் கடை தொடங்கலாம். மேலும் விவரங்களுக்கு 04362-238253, 76010-58074.