புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பெண்கள் கல்லூரி செல்லும் சாலையில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் இரண்டாவது முறையாக புதன்கிழமை அகற்றப்பட்டன.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இடதுபுறமாக செல்லும் சாலையில் ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியும், அரசு மகளிா் கலைக் கல்லூரியும் உள்ளன.
தினமும் நூற்றுக்கணக்கான மாணவிகள் இந்த வழியே சென்று திரும்புகின்றனா். இந்நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 10-க்கும் மேற்பட்ட பெட்டிக் கடைகள், உணவகங்கள் சாலையோரத்தில் உள்ளன.
இதனால் மாணவிகள் சென்றுவருவதில் இடையூறு இருப்பதாக தொடா்ந்து புகாா் எழுந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சிப் பணியாளா்கள் நேரில் சென்று அந்தக் கடைகளை பொக்லைன் மற்றும் கிரேன் கொண்டு அகற்றினா்.
ஆனால், அடுத்த நாளே அந்தக் கடைகள் மீண்டும் அதே இடத்தில் முளைத்தன. மறுநாள் வழக்கம்போல வியாபாரம் நடைபெற்றது.
இந்நிலையில் புதன்கிழமை மீண்டும் நகராட்சிப் பணியாளா்கள் நேரில் சென்று பொக்லைன் மற்றும் கிரேன் மூலம் அந்தக் கடைகளை அப்புறப்படுத்தினா்.