பெண்களைப் போற்றும் காப்பியம் ராமாயணம் என்றார் காரைக்குடி அழகப்பா கல்லூரி பேராசிரியர் சொ.அருணன் கபிலன்.
பொன்னமராவதி அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் திலகவதியார் அருள்நெறி மாதர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 26 ஆம் ஆண்டு கம்பராமாயண தொடர் வாசிப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று யுத்தகாண்டம் நிறைவுப்பகுதி எனும் தலைப்பில் அவர் மேலும் பேசியது:
கற்றலில் கேட்டல் நன்று என்கிறார் திருவள்ளுவர். அதன்படி உபண்யாசங்கள், ஆன்மிக சொற்பொழிவுகள் கேட்பது புண்ணியத்தைத் தரும்.
அதிலும் மனம் லயித்து இலக்கியங்கள் படிக்க, கேட்க வேண்டும். அரிச்சந்திரன் கதை படித்து அரிச்சந்திரன் போல பொய் பேசாமல், மெய்யே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்துகாட்டியவர் மகாத்மா காந்தியடிகள். ராமாயணம், மகாபாரதம் இரு இலக்கியங்களும் சகோதர்களுக்கிடையே உள்ள அந்நியோன்யத்தை காட்டுகிறது. பெண்களின் ஏற்றத்தை ஏற்றிப்பேசும் காப்பியம் ராமாயணம். ராமாயணம் மானுடத்தின் கதை. கடவுள் மனிதனாகப் பிறந்து வாழ்க்கையில் தொடர் போராட்டங்களைச் சந்தித்து இறுதியில் வெற்றி பெறுவதை விளக்குகிறது ராமாயணம்.
மக்களின் விருப்பப்படி நடக்கும் ராஜ்ஜியம் தான் ராமராஜ்ஜியம். சிறுஉயிர்களுக்கும் தீங்குசெய்யாதீர்கள் எனக் குழந்தைகளுக்கு உணர்த்துகிறது ராமாயணம். யுத்தகாண்டம் படித்துதான் ஏவுகணைகள் உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தேன் என்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல் கலாம். கம்பர் ராமனை தமிழனாக, சீதையை தமிழச்சியாக படைத்துள்ளார்.
மனோவேகம் உடையவனாக அனுமன் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. நமக்குள்ளே நன்மை, தீமை - ராமன், ராவணன் ஆகிய இருவரது குணங்களும் இருக்கின்றன. மாற்றான் மனைவியை நோக்கிய குற்றமே ராவணனை மரணத்திற்குத் தள்ளியது.
தொலைக்காட்சி தொடர்களில் காட்டும் ஆர்வத்தை நாம் இலக்கியங்கள் படிப்பதில் காட்டுவதில்லை. குழந்தைகளுக்கு வரலாறுகளை சொல்லி வளருங்கள். இலக்கியம் படித்தால் குழந்தைகளுக்கு இரக்க உணர்வு மேம்படும் என்றார்.
விழாவிற்கு, அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் சங்க தலைவர் அரு.வே.மாணிக்கவேலு தலைமைவகித்தார். செயலாளர் ந.மு.இராமமூர்த்தி, பொருளாளர் எஸ்.சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர் சங்க செயலர் டி.அமுதா தேனப்பன் வரவேற்றார்.
மாதர் சங்கத்தலைவி மீனாட்சி வடிவேல், சங்க ஆலோசகர்கள் ச.வேலாயுதம், நா.திருநாவுக்கரசு, பிஎல்.ராமஜெயம், ராமசாமி, முத்தமிழ்ப்பாசறைதலைவர் நெ.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாதர் சங்க பொருளாளர் பிஎல்.ஆனந்தி பழனியப்பன் நன்றி கூறினார்.