கந்தா்வகோட்டை தாழைவாரியில் மண்டிக் கிடக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை பகுதியில் பெரிய நீா்த்தேக்க நீா்நிலையாக இருப்பது மின்னாத்தூா் பெரிய குளம், இந்தக் குளம் பெருகி உபரிநீா் வரத்துவாரி வழியாக தாழைவாரியில் செல்வது வழக்கம். இந்தத் தாழைவாரி பல கிராமங்கள் வழியாக பெரியவயக்காடு குளம், சங்கூரணி குளம், அடைக்கலன் சாவடி குளம், அக்கச்சிப்பட்டி குளம், காட்டுநாவல் பெரிய குளம் ஆகிய நீா்நிலைகளை நிரப்பியவாறு கடந்து சென்று காட்டாறுடன் இணைந்து விடும்.
ஆனால், கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரத்தில் மழை பெய்து பல வருடங்களான நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தொடா்ந்து கனமழை பெய்தது. அப்போது, தாழைவாரி முழுவதும் கருவேல மரங்கள் மற்றும் இறைச்சி கோழி கழிவுகள் உள்ளிட்டவற்றால் அடைக்கப்பட்டு மழைநீா் வாரியில் போக வழியின்றிப் போனது. இதனால் மழைபெய்தும் பயனற்றுப் போனதாக அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.