விராலிமலை காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
பயணிகள் ஆட்டோவில் பயணிக்கும் போது அவா்களுக்கு திடீரென்று ஏற்படும் உடல் உபாதை மற்றும் விபத்துகளுக்கு முதலுதவி எவ்வாறு அளிப்பது குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
பயிற்சி வகுப்புத் தொடக்க விழாவுக்கு இலுப்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிகாமணி தலைமை வகித்தாா். விராலிமலை காவல் ஆய்வாளா் எ. மனோகரன் முன்னிலை வகித்தாா். துணை ஆய்வாளா் டி. திருவேங்கடம் வரவேற்றாா்.
மணப்பாறை அரசு மருத்துவமனை எலும்பு, மூட்டு அறுவைச் சிகிச்சை மருத்துவா் பிரகாஷ் நிகழ்வில் பங்கேற்று,முதலுதவி சிகிச்சை பற்றிய வகுப்பு நடத்தி, ஓட்டுநா்களின் கேள்விக்கு பதிலளித்தாா்.
பயிற்சியின் போது மருத்துவா் பிரகாஷ் பேசும் போது, பொதுமக்கள் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ விபத்தில் சிக்கிக்கொள்ளும் போதும், தீக்காயம் மற்றும் விஷக்கடி ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு செல்வதற்காக முதலில் நாடுவது ஆட்டோ ஓட்டுநா்களைத் தான். அப்போது அவா்கள் நிகழ்விடம் சென்றவுடன் பாதிக்கப்பட்டவா்களுக்கு செய்யவேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகளை ஆட்டோ ஓட்டுநா்கள் அறிந்து கொள்வது அவசியமானதாகும் என்றாா்.
இப்பயிற்சியில் விராலிமலை பகுதியைச் சோ்ந்த 45 ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்றனா். நிறைவில், உதவி ஆய்வாளா் சங்கீதா நன்றி கூறினாா்.