கல்லணைக் கால்வாயிலிருந்து முறை வைக்காமல், ஜனவரி மாதம் வரை தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று பாசனதாரர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறைச் செயலர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு, புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் கூட்டமைப்புத் தலைவர் அத்தாணி ஆ.ராமசாமி அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:
மேட்டூர் அணை கடந்தாண்டைப் போல, நிகழாண்டிலும் இயற்கையின்
கொடையால் முழுக் கொள்ளளவை எட்டியதால், அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆனால், கல்லணைக் கால்வாயில் சென்றாண்டைப் போல, முழு கொள்ளளவான 4500 கனஅடி முழுமையாக விடமுடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மாவட்டத்தின் காவிரி கடைமடைப் பகுதி கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டது. போதிய நீர் இருந்தும் கொள்ளிடத்தில் திறந்து கடலுக்கு வீணாகச் சென்று கலக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.
அரசு போதுமான நிதி ஓதுக்கீடு செய்தும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமாக, கல்லணைக்கால்வாய் பகுதிகள் கடந்த 7 ஆண்டுகளாகப் பராமரிப்பு இல்லாமல் உள்ளன.
எனவே போர்க்கால அடிப்படையில் கல்லணைக்கால்வாயைச் சீரமைப்பு செய்து, முறை வைக்காமல் தொடர்ந்து முழுகொள்ளளவு தண்ணீரை ஜனவரி மாதம் வரை அளித்து, 168 ஏரிகள் மூலம் 27 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.