அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டும் அமைப்பு சார்பில், மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செவ்வாய்க் கிழமை புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
தங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட நூல்களை, மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு திசைகள் அமைப்பு வழங்கி வருகிறது. நூலகப் புத்தக அன்பளிப்புத் திட்டத்தின் 5-ஆவது நிகழ்வாக, மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்குபள்ளித் தலைமையாசிரியர் ரெத்தினமூர்த்தி தலைமை வகித்தார். அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.சிவயோகம் முன்னிலை வகித்தார். திசைகள் அமைப்பின் தலைவர் மருத்துவர் எஸ்.தெட்சிணாமூர்த்தி நூல்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். முதுநிலை ஆயுஷ் நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த நாகுடி சித்தமருத்துவர் பொன்மணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பள்ளிக்கு நூல்களை வழங்கிப் பேசினார்.
நிகழ்வில் ஆசிரியர்கள் மேகலா இங்கர்சால், பாஸ்கரன், அமைப்பின் நிர்வாகிகள் சுரேஷ்ராஜ், தினேஷ், ரியாஸ்அகமது, அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக திட்ட இயக்குநர் யாஸ்மின்ராணி விளக்கவுரையாற்றினார், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேது.புகழேந்தி வரவேற்றார். நிறைவில் பொருளாளர் முகமது முபாரக் நன்றி கூறினார்.