குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட இதர சலுகைகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆவுடையார்கோவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத்தலைவர் எம்.ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஆத்மநாதன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் ஓப்பந்தத் தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வங்கி மூலமாக வழங்க வேண்டும். மேலும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவேண்டும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பராமரிப்புப் பணிகளில் பணியாற்றும் ஓப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.445 தினசரி ஊதியமாக நிர்ணயித்துள்ளது. மேலும் டெண்டர் விதிகளில் சட்டப்படி ஊதியம் வழங்கப்படவேண்டும். குறைந்த பட்ச போனஸ் ரூ.7ஆயிரம், முறையான 24 சதவிகித பி.எப்., 6 சதவிகித இ.எஸ்.ஐ. ஆகியவற்றை கணக்கில் செலுத்த வேண்டும்.கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.