மானாவாரி நிலங்களில் பனைமரம் வளர்க்க விலையில்லா பனை விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் மூலம், மானாவாரி நிலங்களில் பனைமரம் வளர்க்க விலையில்லா பனை விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
நன்கு வயது முதிர்ந்த ஒரு பனை மரத்தில் இருந்து ஓராண்டில் ரூ.2, 500 முதல் ரூ.3,500 வரை வருமானம் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் 400 முதல் 500 பனை மரங்களை வளர்த்து ஆண்டுக்கு ரூ. 12 முதல் 15 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். மேலும் பனை பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் அன்னிய செலாவணியையும் ஈட்டலாம்.
மாவட்டத்தில் நிகழாண்டில் 16 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களில், ஹெக்டேர் ஒன்றுக்கு 50 பனை விதைகள் வீதம் சுமார் 8 லட்சம் தரமான பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பட்டா நிலங்களின் வரப்பு ஓரங்கள், பயிர் சாகுபடி செய்ய இயலாத நிலங்கள், நீர்ப்பாசன வாய்க்கால்கள், ஏரி கரைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் பனை விதைகள் நடவு செய்யலாம்.
கடின மண்ணில் பனை விதைகளை 2 அடி ஆழம் மற்றும் 1அடி விட்டம் குழி எடுத்து , ஒரு குழிக்கு இரண்டு விதைகள் வீதம் விதைத்து உரிய முறையில் பராமரித்தால் 21 நாள்களில் முளைத்து 5 முதல் 6 மாதங்களில் முதல் இலை மண்ணுக்கு வெளியே வரும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.