புதுக்கோட்டை நகரில் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை நிகழ்வு முடிந்தவுடன் அகற்ற வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியர் எம்.எஸ். தண்டாயுதபாணி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை விழுந்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புதுக்கோட்டை நகரில் வியாழக்கிழமை இரவே சமூக ஆர்வலர்கள் திரண்டு பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை நகராட்சி நிர்வாகம் சார்பில், விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்றது. நகரின் பெரும்பாலான பதாகைகள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய வருவாய்க் கோட்டாட்சியர் எம்.எஸ். தண்டாயுதபாணி, அனுமதியின்றி வைக்கப்படும் அனைத்து டிஜிட்டல் பேனர்களையும் (விளம்பரப் பதாகைகள்) அவ்வப்போது அகற்ற வேண்டும், அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்தாலும் நிகழ்ச்சி நடைபெற்ற நாளன்றே அவற்றை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், துணைக் காவல் கண்காணிப்பாளர் பா. ஆறுமுகம், ஆய்வாளர்கள் பரவாசுதேவன், அப்துல்ரகுமான் மற்றும் புதுக்கோட்டை நகரில் டிஜிட்டல் பேனர் தொழிலில் ஈடுபட்டுள்ள கடைக்காரர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
ஆலங்குடியில் : ஆலங்குடியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை பேரூராட்சிப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை மாலை அகற்றினர்.
ஆலங்குடியில் வடகாடு முக்கம், சந்தைப்பேட்டை, அரசமரம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில், பேரூராட்சிப் பணியாளர்கள் அகற்றினர்.